என்சைக்ளோபீடியா போல சென்னையைப் பற்றிய பல (ஆன்மிகத்) தகவல்களை கொட்டிச் செல்கிறது “மெட்ராஸ்-சென்னை” புத்தகம் (ப்ராடிகி பதிப்பு). புராதனகாலத்திய சென்னையின் படிமங்களைச் சொல்வதோடு கூவத்தின் இன்றைய நாற்றத்தையும் பதிவு செய்கிறது. இன்றைக்கு கடற்கரை ஓரமாக ஒரே பகுதியில் சுருங்கிவிட்ட இந்த பாவப்பட்ட மக்கள் தான் சென்னையின் பூர்வகுடிகளாம். மொத்த தமிழகத்திலிருந்தும் இடம்பெயர்ந்த தமிழக அகதிகளாலும், ஐ.டி துறையைத் நாடி, தேடி வந்த அகில இந்திய அகதிகளாலும் சென்னை ஆக்கிரமிக்கப்பட சென்னையும் வளர்ந்துகொண்டே வந்தது, கட்டிடங்களின் அளவிலும் பரப்பளவிலும், உயரமான பனை மரங்களை அழித்து உயரமான, மிக உயரமான கட்டிடங்களைக் கட்டிவிட்டோம்.
சென்னையில் மிகுந்திருந்த பனைமரங்கள் தான், தமிழ்நாட்டின் மாநில மரமாம், இந்த தகவலையும் இந்த புத்தகம் பதிவு செய்கிறது. ஆனால் இன்று சென்னை என்று சொல்லப்படும் வட்டாரத்தில் ஒரேயொரு பனைமரத்தையாவது பார்க்க முடியுமா? முடியுமென்று சொல்கிறது இந்த புத்தகம். கிண்டி சிறுவர் பூங்காவிலும், ஐஐடியிலும், தியோஸபிக்கல் சொசைட்டியிலும் பார்க்கலாமாம். இப்படியே போனால் சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகளில் வரும் குழந்தைகளுக்கு அதிசய பொருட்களாக பனைமரங்களை காட்ட வேண்டி வரலாம்.
சென்னையிலுள்ள பல ஊர்களின் பெயர்க் காரணங்களை இந்த புத்தகம் பதிவு செய்கிறது. மயில்களின் நடமாட்டத்துக்கு பெயர் பெற்ற, பார்வதி ஒரு பெண் மயிலாக மாறி சிவனை வழிபட்டாளாம் இதனால் அந்த இடத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் வந்ததாம். இப்படி பெயர் காரனத்தைச் சொல்லிவிட்டு மயிலாப்பூரின் பல புராதனச் சிறப்புகளைச் சொல்கிறது, அதாவது, கோயில் சிறப்புகளைச் சொல்கிறது. பேயாழ்வார் கினற்றடியில் கண்டெடுக்கப்பட்டதையும், மயிலாப்பூரின் கபாலீஸ்வரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் இடிக்கப்பட்டு சாந்தோம் தேவாலயமும் போர்த்துக்கீசிய குடியிருப்புகளும் அமைக்கப்பட்டதால், இப்போதைய கபாலீசுவரர் கோயில் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதையும் கூறுகிறது. அப்படியே அந்தக் கோவிலின் கட்டமைப்பையும் கூறுகிறது. இப்படியே திருவல்லிக்கேணிக்கு, பல்லாவரத்துக்கு, திருவாண்மியூருக்கு என கோவில்கொண்ட தளங்களை பாடுகிறது புத்தகம். திருநங்கையாழ்வாரின் பெயரைக் கொண்டு ஆழ்வார்பேட்டை எனப் பெயர்பெற்றது. நன்கு பழுத்த மாம்பழங்களைக் கொண்டிருந்ததால் மாம்பலம். மாமரங்களின் காடிருந்ததால் மாங்காடு. இப்படி பல ஊர்களின் பெயர்க்காரணங்களைக் கூறுகிறது. தொண்டை மண்டல அரசனையும், பல்லவ வம்ச அரசர்களையும் மற்ற ஏனைய அரசர்களையும் கூறுகிறது.
“…கி.பி இரண்டு, மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துரு, கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டு உள்ளது. அதனால் அப்பொழுதே எழுதத் தெரிந்திருக்கிறது…” “சற்றேறக்குறைய கி.பி 200ஆம் நூற்றான்டில் தமிழின் சிறந்த கவிஞர் திருவள்ளுவர் மயிலாப்பூரில் வசித்துவந்தார்.” இப்படி சில இடங்களில் வரலாற்றுப்பிழை தென்படுவதால் புத்தகத்தில் கூறப்படும் செய்திகளின் நம்பகத் தண்மை வெகுவாக குறைகிறது. ஆனால் புத்தகத்தில் பெரும்பாலும் ஆன்மிகச் செய்திகள் பரவிக்கிடப்பதால் வரலாற்று ஆதாரங்களையும், வரலாற்றுப் பிழைகலையும் கண்டுக்கொள்ளத் தேவையில்லை என்று மண்டைக்குள் மணியடிக்கிறது.
புத்தகத்தின் பெரும் பகுதி, சென்னையையும் சென்னையைச் சுற்றியுள்ள கோவில்கலையும் கோவில் சிறப்புகளையுமே சுற்றிச் சுற்றிச் சொல்கிறது. ஆனால், மற்ற பிற முக்கிய இடங்களைப் பற்றிச் சொல்ல ஒரு சில பக்கங்களே போதுமானதாக ஆசிரியருக்குப் பட்டுவிட்டது போலும். அதேபோல சென்னையின் நகர பெருக்கத்தாலும், மக்கள் நெருக்கத்தாலும் ஏற்பட்ட, ஏற்படும் பிரச்சினைகளையும் சொல்ல மூன்று பக்கங்களே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் இந்த பகுதி ஒரு எட்டாம் வகுப்பு மாணவன் எழுதிய கட்டுரையைப் போலத்தான் இருக்கிறது அந்தளவுக்கு கருத்து வறட்சி, எழுத்து வறட்சி. பல இடங்களில் மொழிபெயர்ப்பு பல்லிளிக்கிறது. பல இடங்களில் காலம் தடுமாறுகிறது. நிகழ்காலமும் எதிர்காலமும் கலந்துகட்டியடிக்கிறது. இதெல்லாம் வாசிப்போட்டத்தை தடுக்கிறது. ஒருவேளை இது குழந்தைகளுக்கான புத்தகம் என்பதால், இதிலெல்லாம் தீவிர கவனம் செலுத்தப்படவில்லையோ. குழந்தைகளுக்கான புத்தகத்தில் தான் இந்த தவறுகள் திருத்தப்பட வேண்டியது கட்டாயம்.
பெயர்: மெட்ராஸ்-சென்னை
ஆசிரியர்: நந்திதா கிருஷ்ணா
தமிழில்: ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்
பக்கங்கள்:96
விலை:25
பதிப்பகம்: ப்ராடிகி
